அனோஜன் விவகாரம்: மோடியின் உதவியை நாடுங்கள் ; ஜனாதிபதிக்கு மனோ எம்.பி. கோரிக்கை
அனோஜன் விவகாரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அனோஜன் சிவராசா எதிர்கொள்ளும் நிலை குறித்து பிரதமர் மோடியின் அவசர கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் அவர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மோடியிடம் கோரிக்கை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சவூதி அரேபிய பிரதமரும் பட்டத்து இளவரசருமான மொஹம்மத் பின் சல்மானுக்கும் இடையில் நெருக்கமான உறவு காணப்படுவதால், அந்த உறவைப் பயன்படுத்தி அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையிலான தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க முடியும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
எனவே, சவூதி இளவரசர் மொஹம்மத் பின் சல்மானுடன் தனிப்பட்ட முறையில் பேசி அனோஜன் விவகாரத்தில் தலையிடுமாறு பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுக்குமாறும் அவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இலங்கையின் உயரிய விருதான “ஸ்ரீலங்கா ரத்னா” விருதை ஏற்றுக்கொண்டதன் மூலம் பிரதமர் மோடி இலங்கையுடனான தனது நெருக்கமான உறவை வெளிப்படுத்தியுள்ளதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.