லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் விசேட அறிவிப்பு
இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் வழங்கப்படும் மின்னணு பயண அனுமதி (ETA) அறிவிப்புகளை விநியோகிப்பதில் தற்காலிக சேவைத் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சியத்திலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
லண்டனிலுள்ள உயர்ஸ்தானிகராலயத்தின் கொன்சியூலர் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில் இவ்விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாகவே இந்தச் சேவைத் தடங்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கையிலுள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை முன்னுரிமை அடிப்படையில் சரிசெய்யும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மின்னணு பயண அனுமதிக்கு விண்ணப்பித்த பயணிகள், தமக்குரிய உத்தியோகபூர்வ அனுமதி அறிவிப்பு கிடைக்காவிட்டாலும் இலங்கைக்குப் பயணிக்க முடியும்.
பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு மின்னணு பயண அனுமதி அறிவிப்பைச் சமர்ப்பிப்பதிலிருந்து விலக்களிக்குமாறு அனைத்து விமான நிறுவனங்களுக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததும், அவர்களது மின்னணு பயண அனுமதி சரிபார்ப்பு மற்றும் தேவையான ஏனைய வசதிகள் அங்குள்ள அதிகாரிகளினால் செய்து கொடுக்கப்படும்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வழமை நிலையை விரைவில் சீர்செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதனால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.