திருமணத்திற்கு முன் உடலுறவு ; நீதிமன்றம் இளைஞர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகத் தொடரப்படும் முறைப்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், திருமணத்திற்கு முந்தைய உடலுறவு குறித்து இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் மேல் நீதிமன்றம் கடந்த 16 ஆம் திகதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த கருத்து பழமைவாதமாகத் தோன்றினாலும் அவசியமானது என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
திருமண வாக்குறுதியை மீறியதாக பாலியல் வன்கொடுமை வழக்கை எதிர்கொள்ளும் நபர் ஒருவரின் பிணை மனுவை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட பெண் எவ்வாறு அந்த நபருடன் துபாய்க்குச் செல்ல ஒப்புக்கொண்டார் என்றும், அங்கு அவர்கள் உடலுறவு கொண்டதையும் சுட்டிக்காட்டி கேள்விகளை எழுப்பியது.

முறைப்பாடளித்த பெண், அந்த நபரின் வற்புறுத்தலின் பேரில் துபாய்க்குச் சென்றதாகவும், அங்கு அவர் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடலுறவு கொண்டதாகவும், ஆனால் பின்னர் அவர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
பரஸ்பர சம்மதத்துடன் உறவு இருந்த இத்தகைய வழக்குகள், விசாரணைக்கும் தண்டனைக்கும் உகந்தவை அல்ல என்று நீதிபதி தெரிவித்தார்.
எனவே, இரு தரப்பினரையும் சமரசத் தீர்விற்கு (Mediation) பரிந்துரைத்த நீதிமன்றம், சுமூகமாகத் தீர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு கேட்டுக்கொண்டது.
இது குறித்த இரு தரப்பு கருத்துக்களையும் அறிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. "திருமண விடயத்தில் அவர் அவ்வளவு உறுதியாக இருந்திருந்தால், திருமணத்திற்கு முன்பு துபாய்க்குச் சென்றிருக்கக் கூடாது.
இது போன்ற பரஸ்பர சம்மதத்துடன் கூடிய உறவு இருக்கும்போது, இவை விசாரணை நடத்தி தண்டிக்கப்பட வேண்டிய வழக்குகள் அல்ல," என்றும் நீதிபதி குறிப்பிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.