இலங்கையின் நாளைய வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை (02) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிடைத்துள்ளது.
நாளைக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டு அத்திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

பலத்த காற்று
இதன்படி, ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முதல் செப்டம்பர் 07 ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.
அதன்படி, நாளை (02) நண்பகல் 12:10 மணிக்கு ஆனமடுவ, மொரகொல்லாகம, தம்புள்ளை, மனம்பிட்டி மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.