ஏர்பஸ் மோசடி வழக்கு ; ராஜபக்ஷ குடும்பம் தொடர்பில் மிகப்பெரிய அதிர்ச்சி
சர்ச்சைக்குரிய எயார்பஸ் விமான கொள்வனவின் போது இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் இளைய புதல்வரான சமிந்திர ராஜபக்சவை மூன்றாவது சந்தேகநபராக கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று பெயரிட்டுள்ளது.
இந்தநிலையில், தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் இவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த கால அரசாங்கத்தின் போது ரஷ்யாவிடமிருந்து போர் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல மில்லியன் டொலர் நிதி மோசடி தொடர்பில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 10 எயார் பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக, பிரான்ஸைத் தளமாகக் கொண்ட எயார் பஸ் நிறுவனம் சுமார் 16.84 மில்லியன் அமெரிக்க டொலர்களை கையூட்டலாக வழங்க இணங்கியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற இந்த ஊழலில், ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா விஜேநாயக்க ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக இனங்காணப்பட்டனர்.