தேசிய மக்கள் சக்தியினருக்கும் எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை உறுதி
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் யாரேனும் தவறு செய்து, அது நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி கையூட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, அவருக்கு எதிராக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கையளித்துள்ள அவநம்பிக்கை பிரேரணை தொடர்பாகவும் கலந்துரையாடப்படுகின்றது.
எனினும், தற்போதைய நிலையில் இவ்வாறான குற்றச்சாட்டுகள் வரும் போது, அதனை விசாரணை செய்வதற்கு தமது அரசாங்கம் எவ்வித தடையையும் ஏற்படுத்தாது என்றும் தெரிவித்தார்.
ஆனால், முறைப்பாடு செய்தவுடன் அவர்களுக்கு எதிராக உடனடியாக எவ்வித நடவடிக்கையையும் எடுக்க முடியாது என அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
விசாரணைகள் நிறைவடையும் போது, அவர்களுக்கு எதிராக ஏதேனும் குற்றங்கள் இருந்தால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேபோன்று, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகரவுக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணையை கொண்டுவர முடியுமா என்பது தங்களுக்கு தெரியவில்லை என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
எனினும், கடந்த அரசாங்கத்தின் போது, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்க முடியும். அதனை விடுத்து, தற்போது அவர் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட பின்னர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டினார்.
எது எவ்வாறாயினும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகரவுக்கு எதிராக அவநம்பிக்கை கொண்டுவரும் பட்சத்தில் அதற்கு உரிய பதிலை வழங்குவதற்கும் அரசாங்கம் தயாராக இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.