கொழும்பு-இரத்தினபுரி பிரதான வீதியில் விபத்து ; பெண் ஒருவர் உயிரிழப்பு
கொழும்பு-இரத்தினபுரி பிரதான வீதியில் இரத்தினபுரியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், உடகட வீதிக்கு திரும்பும் சந்திக்கு அருகில் கொள்கலன் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் பெண் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்றிரவு (01) 8.10 மணியளவில் நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள், கொள்கலன் லொறியின் இடது பக்கத்தில் மோதி கவிழ்ந்ததோடு, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் லொறியின் மீது தூக்கி வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவர் இரத்தினபுரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 46 வயதுடைய பெண் ஆவார். லொறி மோட்டார் சைக்கிளை கடந்து செல்ல முயன்ற வேளையில் விபத்து ஏற்பட்டதாகவும், லொறி சாரதியின் கவனக்குறைவே விபத்துக்குக் காரணம் என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரான லொறியின் சாரதி குருவிட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.