பாடசாலை வளாகத்தில் ரத்தக்கலரி ; சக மாணவர்களை கத்தியால் குத்திய உயர்தர மாணவன்
அனுராதபுரம் மாவட்டத்தின் எப்பாவலை நகரிலுள்ள பிரதான அரச பாடசாலை ஒன்றில் இன்று (13) இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மாணவர்கள் உடனடியாக எப்பாவலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவர்களில் எவரின் நிலையும் கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
தாக்குதலில் காயமடைந்தவர்கள் அனைவரும் குறித்த பாடசாலையில் 12ஆம் தரத்தில் தொழில்நுட்பப் பிரிவில் கல்வி பயிலும் மாணவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் மாணவரும் அதே பாடசாலையில் 12ஆம் தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்கும் மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், தாக்குதலை நடத்திய மாணவருக்கும் காயமடைந்த மாணவர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறே இந்தச் சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பழிவாங்கும் நோக்கில் இன்று காலை பாடசாலைக்குள் கூர்மையான ஆயுதத்துடன் வந்த மாணவர், மற்றொரு மாணவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அதனைத் தடுக்க முயன்ற மேலும் நான்கு மாணவர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தை அடுத்து, தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்துடன் குறித்த மாணவரை எப்பாவலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எப்பாவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.