யாழில் கொரோனா தொற்றால் மரணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
யாழில் இன்று 5 பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காலை, யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த சங்கானையைச் சேர்ந்த 64 வயதுடைய பெண் உயிரிழந்திருந்தார். அதேவேளை, தென்மராட்சி குடமியன் பகுதியில் வசித்துவந்த 97 வயது முதியவர் உயிரிழந்த நிலையில் அவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
நேற்று சங்கானையில் உயிரிழந்த 46 வயதுடைய குடும்பப் பெண்ணுக்கும் கொரோனாத் தொற்று இருப்பதாக இன்று உறுதி செய்யப்பட்டுள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வடமராட்சியிலும் இருவர் வீடுகளில் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கும் கொரோனாத் தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 100 வயதுடைய முதியவர், அல்வாயைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் ஆகியோரே வீடுகளில் உயிரிழந்த நிலையில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதே வேளை சற்று முன் யாழ் அரச அதிபர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக காணப்படுகிறது.
அந்த வகையில் இன்று மாலை 4 மணிவரையான கடந்த 24 மணிநேரத்தில் 74 பேர் பிசிஆர் பரிசோதனையிலும் 301 பேர் அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையிலும் மொத்தமாக 375 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
அரசாங்க அதிபர் மேலும் தெரிவிக்கையில், மேலும், மொத்தமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2020 மார்ச்சிலிருந்து இன்று மாலை வரை 12460 பேர் கோவிட்-19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த காலத்தைவிட தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு இறப்புக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மேலும் இற்றைவரையான கணக்கெடுப்பின்படி 243 நபர்கள் இறப்புக்குள்ளாகியுள்ளார்கள். அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் 5173 குடும்பங்களைச் சேர்ந்த 15164 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும்,வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் J/26 கிராமமும், மருதங்கேணிப்பிரதேச செயலாளர் பிரிவில் J/432, J/433 கிராம அலுவலர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்திலும் இறுக்கமாக கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டிய தேவையுள்ளது.
சுகாதார அமைச்சின் வழிகாட்டல் மற்றும் கொவிட் செயலணியின் வழிகாட்டலுக்கு அமைய ஒன்று கூடல்கள், திருமண நிகழ்வுகள் மற்றும் ஏனைய நிகழ்வுகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் மிக அவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வரவேண்டும் அதேவேளை சுகாதார நடைமுறைகளான முக கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணல், தேவையற்ற நடமாட்டம் , ஒன்றுகூடல்களை தவிர்க்க வேண்டும்.
எனவே இந்த நடைமுறைகளைப் பின்பற்றி எம்மையும், குடும்பத்தையும் , சமூகத்தையும் பாதுகாக்க வேண்டும் என அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் தடுப்பூசி நடவடிக்கைகளும் மும்முரமாக நடைபெற்றுவருகிறது.
அந்தவகையில் குறிப்பிட்ட வயதிற்கு மேற்பட்டவர்களில் மொத்தமாக 289855 பேர் தமது தடுப்பூசியை பெற்றுள்ளார்கள். தொடர்ச்சியாக தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.அத்தோடு எழுந்து நடமாட முடியாத வயோதிபர்களுக்கு வீடுவீடாக சென்று தடுப்பூசி போடப்படுகிறது.
இதில் இராணுவத்தினரும் தற்போது கைகோர்த்து தடுப்பூசி நடவடிக்கைகளுக்கு உதவ முன்வந்துள்ளார்கள். தடுப்பூசிகளை விரைந்துபெற்றுக்கொள்வது எமது பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும். எமது இறப்புக்களை தவிர்க்கக்கூடிய நிலைமையை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
ஆகவே பொதுமக்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தலின்படி தங்களையும் , சமூகத்தையும் பாதுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.