போதைப்பொருள் பாவனையுடன் பேருந்துகளை செலுத்திய சாரதிகளுக்கு அதிரடி
போதைப்பொருள் பாவனையுடன் பேருந்து சேவையில் ஈடுபட்டிருந்த 4 சாரதிகள் மற்றும் 2 நடத்துநர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் பாவனையுடன் பயணிகள் பேருந்துகளை இயக்கும் சாரதிகள் மற்றும் நடத்துநர்களைப் பரிசோதிக்கும் விசேட நடவடிக்கையொன்றைப் பொலிஸார் ஹொரணை பிரதான பேருந்து நிலைய வளாகத்தில் முன்னெடுத்த போதே சந்தேகநபர்கள் இவ்வாறு கைதாகியுள்ளனர்.

மேலதிக விசாரணை
ஹொரணை, இங்கிரிய, மொரகஹஹேன மற்றும் அங்குருவாதொட்ட ஆகிய பொலிஸ் நிலையங்களின் போக்குவரத்துப் பிரிவு உத்தியோகத்தர்கள், தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவன அதிகாரிகளுடன் இணைந்து இந்தச் சோதனையை நடத்தினர்.
இதன்போது ஹொரணை நகரிலிருந்து புறப்படும் மற்றும் நகரத்தினூடாகப் பயணிக்கும் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இங்கு மொத்தம் 151 பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் பரிசோதிக்கப்பட்டதுடன், போதைப்பொருள் பாவனையுடன் பேருந்து சேவையில் ஈடுபட்டிருந்த 4 சாரதிகள் மற்றும் 2 நடத்துநர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், அந்த சாரதிகளால் செலுத்தப்பட்ட 4 பேருந்துகளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைதானவர்கள் 34 முதல் 61 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் குடாஓடுவ, பெல்லபிட்டிய, கழுகஹஹின்ன, கோவின்ன மற்றும் எகொடஹேன ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பாக ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.