இயற்கையின் கோர தாண்டவத்தில் 1000 பேரை காணவில்லை; நேபாள வெளியுறவு அமைச்சர்
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், அங்கு சுற்றுலாவுக்கு வந்திருந்த 300 இந்தியர்கள் உட்பட சுமார் 1000 பேரை காணவில்லை என நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கனால் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தின் வடக்கு எல்லையான ரசுவா மாவட்டத்தில், இமயமலைப் பகுதிகளில் பனிமலைகள் உடைப்பு காரணமாக கோசி, திரிசூலி நதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கில் சிக்கி 175 பேர் உயிரிழந்துள்ளனர்.

300 இந்தியர்கள் உட்பட சுமார் ஆயிரம் பேரை காணவில்லை
300 இந்தியர்கள் உட்பட சுமார் ஆயிரம் பேரை காணவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக நேபாள நாட்டின் தூதரக வட்டாரங்கள் கூறுகையில், “இதுவரை 175 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
உள்ளூர் மக்கள் சுற்றுலாப் பயணிகள் உட்பட பலரை காணவில்லை. தற்போதைய தகவலின்படி, 28 நாடுகளைச் சேர்ந்த 476 பேரை காணவில்லை. இந்த எண்ணிக்கை ஆய்வுக்கு உட்பட்டது வெள்ள பாதிப்பு தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கனால் கூறுகையில், ”ரசுவா பகுதியில் இந்த துயரச் சம்பவத்தில் 160 பேர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளன. தற்போது அவர்களில் பலர் காணாமால் போயுள்ளனர். இந்த பேரிடரின் முழு அளவை நாங்கள் மதிப்பீடு செய்து வருகிறோம்.
இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 300 இந்தியர்கள் - இவர்களில் பெரும்பாலானோர் மானசரோவர் யாத்ரீகர்கள் - காணாமால் போயுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அவர்களைத் தொடர்பு கொள்ள அரசாங்கம் முயன்று வருகிறது. வெளிநாட்டினரில் சுமார் 500 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை. நேபாள குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் நாங்கள் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளோமோ அதே அளவு வெளிநாட்டினரின் பாதுகாப்பு மற்றும் நலனிலும் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம்.
இந்திய அரசு ஏற்கனவே நிவாரண உதவிகளை அனுப்பியுள்ளது. நாங்கள் எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த நெருக்கடியான நேரத்தில் நேபாளத்துக்கு துணை நிற்குமாறும், நாடு தன்னைத்தானே மீட்டெழுப்ப தொடர்ந்து இங்கு வருகை தருமாறும் நாங்கள் உலக நாடுகளிடம் வேண்டுகோள் விடுக்கிறோம்.
உடனடி நிவாரண நடவடிக்கைகள் மட்டுமல்லாது, நேபாளத்துடன் உலகம் தொடர்ந்து இணைந்திருப்பதும் நாங்கள் மீண்டு வர மிக முக்கியம். கடந்த 2015ல் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்துக்குப் பிறகும் நாங்கள் வலிமையுடன் மீண்டு வந்தோம். நேபாளம் தன்னைத்தானே சீரமைத்துக்கொள்ளும்.” என தெரிவித்தார்.