தண்டவாளத்தைக் கடக்க முயன்ற நபர் ஒருவர் தொடருந்து மோதி உயிரிழப்பு
புத்தளம் வென்னப்புவ – வைக்கால் தொடருந்து கடவையில் நேற்று (26.08.2026) மாலை இடம்பெற்ற கோர விபத்தில், சைக்கிளைத் தள்ளிக்கொண்டு தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 55 வயதுடைய நபர் ஒருவர் தொடருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தொடருந்து கடந்து செல்வதற்காக, குறித்த தொடருந்து கடவையின் பாதுகாப்பு கேட் முழுமையாக மூடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பாதுகாப்பு கேட் மூடப்பட்டிருந்த போதிலும், குறித்த நபர் தனது சைக்கிளைத் தள்ளிக்கொண்டு தண்டவாளத்தைக் கடக்க முயன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது வேகமாக வந்த தொடருந்து அவர் மீது மோதியதில், பலத்த காயங்களுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் குளியாப்பிட்டிய, பஹல கழுகமுவ பகுதியைச் சேர்ந்த ரந்திலக பேடிகே கபில லால் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விசாரணைகளின்படி, அவர் வைக்கால் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து வர்ணம் பூசும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.