மன்னார், யாழ்ப்பாணத்தில் சிக்கிய 07 பேர் ; அரங்கேறிய சட்டவிரோத செயல் அம்பலம்
மன்னார் யஹப்பார் மற்றும் யாழ்ப்பாணம் குடாரப்பு கடற்கரைப் பகுதிகளில் நேற்று புதன்கிழமை (26) மற்றும் இன்று வியாழக்கிழமை ( 17) இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமாகக் கடல் அட்டைகளைப் பிடித்த 7 சந்தேகநபர்கள் 3 படகுகள் மற்றும் 1,400 கடல் அட்டைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமத்திய மற்றும் வடக்கு கடற்படை கட்டளைகளுக்கு உட்பட்ட பிரிவுகளால் இச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

கடல் அட்டைகள்
நாச்சிக்குடா, யஹப்பாறு பகுதியில் 'இ.க.க. புவனெக' படையணியினர் நடத்திய சோதனையில் அனுமதிப்பத்திரமின்றி 550 கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற 3 சந்தேகநபர்கள் ஒரு படகுடன் கைது செய்யப்பட்டனர்.
வெற்றிலைக்கேணி கடற்படை முகாமினரால் குடாரப்பு கடற்கரையில் இன்று (17) காலை முன்னெடுக்கப்பட்ட தேடுதலில், இரவில் சட்டவிரோதமாகச் சுழியோடி 850 கடல் அட்டைகளைப் பிடித்த 4 சந்தேகநபர்கள் 2 டிங்கி படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்கள் 29 முதல் 46 வயதுக்குட்பட்ட மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள், படகுகள் மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்திணைக்கள அலுவலகங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.