மோசடியில் ஈடுபட்ட யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
இங்கிலாந்துக்கு இரகசியமாக தப்பிச்செல்ல முயன்ற இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலையை சேர்ந்த இளம் பெண் மற்றுமொரு நபருடன் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டிலிருந்து தப்பிச்செல்ல முயன்ற போதே விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி கடவுச்சீட்டு
நேற்றிரவு (06/15) 08.25 மணியளவில் தோஹா நோக்கிச் செல்வதற்காக கட்டார் எயார்வேஸ் விமானமான KR-655 இல் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
குறித்த பெண்ணின் இந்த விமான பயணத்திற்கு உதவிய தரகர் ஒருவரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரான பெண் அனைத்து அனுமதி நடைமுறைகளையும் முடித்துவிட்டு குடியகல்வு சேவை கரும பீடத்திற்கு வந்து கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்களை சமர்பித்துள்ளார்.
இதன்போது கடவுச்சீட்டில் உள்ள புகைப்படம் அவருடையது அல்ல என்பதைக் கண்டறிந்ததால், அவர் தலைமை குடிவரவு அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட தொழில்நுட்ப சோதனையில், மற்றொரு பெண்ணின் கடவுச்சீட்டில் இந்த பெண்ணின் தகவல்கள் பதிவு செய்து போலியாக தயாரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.