யாழில் அம்பியுலன்ஸ் படகு வர தாமதமானதால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!
யாழ்ப்பாண பகுதியில் உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல அம்பியுலன்ஸ் படகு வர தாமதமானதால் இளைஞன் உயிரிழந்துள்ள சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் யாழ்ப்பாணம் - அனலைதீவு பகுதியில் நேற்றைய தினம் (10-01-2024) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அனலைதீவை சேர்ந்த 23 வயதுடைய தர்சன் எனும் இளைஞன் உழவு இயந்திரத்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளை தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த இளைஞனை கடல் தாண்டி ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக ஆம்புலன்ஸ் படகுக்கு உறவினர்கள் அறிவித்து காத்திருந்த போதிலும், படகு வர தாமதமாகியுள்ளது.
இதனையடுத்து கடற்படையினரின் விரைவு படகின் மூலம் இளைஞனை ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறான நிலையில், உயிரிழந்த இளைஞனை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
தீவகத்திற்கான வைத்திய வசதிகளை செய்து தருமாறு பல வருடங்களாக தாம் கோரி வருகின்ற போதிலும் தீவகத்திற்கான வைத்திய வசதிகள் செய்து தரப்படவில்லை.
கடல் தாண்டி வேறு வைத்தியசாலைக்கு செல்வதற்கு எந்நேரமும் கடலின் நிலைமை சாதகமாக இருக்கும் என சொல்ல முடியாது.
ஆகவே தீவுகளில் உள்ள வைத்தியசாலையை மேம்படுத்தி வைத்திய வசதிகளை செய்து தருமாறு கோரியுள்ளனர்.