தமிழர் பகுதியில் சார்ஜில் இருந்த கைத்தொலைபேசியை திருடிய இளைஞர் கைது
அம்பாறை மாவட்டம், நற்பிட்டிமுனை பகுதியில் வீடொன்றில் சார்ஜ் போடப்பட்டிருந்த கைத்தொலைபேசியை திருடியதாகக் கூறப்படும் 21 வயதுடைய இளைஞர் ஒருவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இன்று (02) கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணை
முறைப்பாட்டின்படி, தனது வீட்டில் சுமார் 35,000 ரூபாய் பெறுமதியான கைத்தொலைபேசியை சார்ஜில் வைத்துவிட்டு வெளியே சென்றிருந்த நிலையில், மீண்டும் வீட்டிற்கு திரும்பியபோது ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டு, கைத்தொலைபேசி திருடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டிற்கு எதிரில் தங்கியிருந்த 21 வயதுடைய இளைஞரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
விசாரணைகளின் போது, திருடப்பட்ட கைத்தொலைபேசியை சந்தேகநபர் தனது உறவினர் ஒருவரின் வீட்டில் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டதுடன், அதனை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேலும், சந்தேகநபரிடமிருந்து ஒரு தொகை 'ஐஸ்' (ICE) போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஆரம்பக்கட்ட விசாரணைகளில், கைதான நபர் போதைப்பொருளுக்கு தீவிரமாக அடிமையானவர் என்பதுடன், கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் மட்டும் அவருக்கு எதிராக ஏழு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சட்ட நடவடிக்கைகளுக்காக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.