கோர விபத்தில் பலியான இரு இளைஞர்கள் ; லொறிக்கு தீ வைத்த பொதுமக்கள்
நீர்கொழும்பு போலவலான பிசிஐ கெம்பஸ் அருகே இன்று (30) அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் தெரிவித்ததாவது, கண்டெய்னர் லொறிக்கும் மோட்டார் சைக்கிளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

மேலதிக விசாரணை
இந்த விபத்தைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அப்பிரதேச மக்கள், விபத்தில் தொடர்புடைய கண்டெய்னர் லொறிக்கு தீ வைத்துள்ளனர்.
இதனை அடுத்து கட்டான பொலிஸார் மற்றும் நீர்கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிலைமையை சீர்செய்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்களும் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், கண்டெய்னர் லொறியின் சாரதி கட்டான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர்கள், நீர்கொழும்பைச் சேர்ந்த 18 வயதுடைய மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்கள் ஆவர்.
கைது செய்யப்பட்ட கண்டெய்னர் லொறியின் சாரதி பன்னில தென்ன பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.