Ez Cash ஊடாக போதைப்பொருள் விற்ற மகாரகம அக்கா!
நுவரெலியா, வெலிமடை, பண்டாரவளை மற்றும் கெப்பட்டிபொல பகுதிகளில் ஈஸி கேஷ் (Ez Cash) முறையைப் பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனை செய்து வந்த “மகாரகம அக்கா” என்ற பெயரில் அடையாளம் காணப்பட்ட 50 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாரகம அக்கா , நுவரெலியா பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல இடங்களில் ஈஸி கேஷ் வழியாக பண பரிமாற்றம்
கைதான பெண் நுவரெலியா மாவட்டத்தில் பல இடங்களில் வாடிக்கையாளர்களுடன் ஈஸி கேஷ் வழியாக பண பரிமாற்றம் செய்து வந்தது கண்டறியப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வாங்கியவர்களின் தொலைபேசி பதிவுகளைப் பகுப்பாய்வு செய்தபோது, சந்தேக நபர் ஹன்வெல்ல பகுதியில் உள்ள ஒரு போதைப்பொருள் வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டு 6ஆம் திகதி வியாழக்கிழமை நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அவருடைய இல்லத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் ரூபா 1,41,000 பணம் மற்றும் 32 கிராம் ஹெராயின் மீட்கப்பட்டன.
நுவரெலியா பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், “மகாரகம அக்கா” நீண்டகாலமாக நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் ரகசியமாக போதைப்பொருள் விற்பனை செய்து வந்திருக்கலாம் என தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தற்போது மேலதிக விசாரணைக்காக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.