நீதிமன்ற வளாகத்தில் நாடகம் ; போலி துப்பாக்கியுடன் சிக்கிய பெண் கைது
கொழும்பு அவிசாவளை நீதவான் நீதிமன்றத்திற்குள் போலி துப்பாக்கியுடன் செல்ல முற்பட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று (27) குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவிசாவளை நீதவான் நீதிமன்றில் இடம்பெறும் போக்குவரத்து தொடர்பான வழக்கு ஒன்றுக்காக தாம் வந்ததாக அவர் கூறியுள்ளார்.

இதன்போது குறித்த பெண் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே, போலி துப்பாக்கியை வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
அத்துடன் அவரது அடையாள அட்டையின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அவருக்கு எவ்வித வழக்கும் நேற்றைய தினம் இருந்திருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இல்லாத வழக்கை இருப்பதாகக் கூறி நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்தமை மற்றும் போலி துப்பாக்கியை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு அவர் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரைவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.