ஏ.சி. வாங்கித் தராத காதல் கணவர் ; இளம்பெண் விபரீத முடிவு
தமிழகத்தில் கணவர் ஏ.சி. வாங்கி தரவில்லை என இளம் குடும்ப பெண் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது,
திருவள்ளூரை அடுத்த பூண்டி ஜெயராம் தெருவை சேர்ந்தவர் ஆகாஷ் (26), இவரும் புல்லரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மோனிகா (25) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

வெயில் காரணமாக இரவு நேரத்தில் புழுக்கம் அதிகம்
திருமணம் நடந்து 2 ஆண்டுகள் ஆகிறது. பாடசாலையில் படிக்கும் போதே காதலித்து வந்த அவர்கள் திருமண வாழ்க்கையிலும் இணைந்துள்ளனர். ஆகாஷ் திருவள்ளூரில் உள்ள தனியார் துணிக்கடையில் வேலை செய்து வருகிறார்.
மோனிகா வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது வெயில் காரணமாக இரவு நேரத்தில் புழுக்கம் அதிகமாக இருப்பதால் வீட்டிற்கு ஏ.சி. வாங்கி தருமாறு மோனிகா கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று (24) இரவு ஆகாஷ் மற்றும் அவரது தம்பி அவினாஷ், அப்பா மற்றும் அம்மா ஆகிய 4 பேரும் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கினார்கள்.
மனைவி மோனிகா மட்டும் வீட்டில் தனியாக தூங்கினார். காலையில் ஆகாஷ் எழுந்து வந்து பார்த்த போது படுக்கை அறையில் மனைவி மோனிகா புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து கணவர் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த புல்லரம்பாக்கம் பொலிஸார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். திருமணமாகி 2 ஆண்டுகளே ஆன நிலையில் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.