கோவில் உண்டியலை உடைத்து திருடிய பெண்ணுக்கு விளக்கமறியல்
நுவரெலியா-ஹட்டன் பிரதான வீதியில் கோவில் ஒன்றில் உண்டியலை உடைத்து 1,300 ரூபாய் திருடிய குற்றச்சாட்டின் பேரில் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பெண்ணை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கம்பளையைச் சேர்ந்த 48 வயது நிரம்பிய பெண்ணே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
நானுஓயா நகருக்கு அருகில் அமைந்துள்ள ஸ்ரீ மருத வீரன் ஆலயத்தில் நேற்று முன்தினம் (16) கொள்ளையடித்த பெண், பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.
சாமி சிலைகள், விளக்குகள் மற்றும் கோவில் உண்டியலை உடைத்து உண்டியலில் இருந்த பணம் என்பவற்றை களவாடி இவர் தப்பிச்செல்ல முற்பட்டுள்ளார்.
மக்களால் பிடிக்கப்பட்ட அவர், நானுஓயா பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் நேற்று (17) நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்ததும் நீதிபதி அப்பெண்ணை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
பொது மக்களிடம் மாட்டிக் கொண்ட பிறகு மனநலம் பாதிக்கப்பட்ட நபர் போல் நடித்து மயங்கி விழுவதுபோல இவர் நடித்துள்ளார் என தோட்டப் பொது மக்கள் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.