கருவை கலைக்க கூறிய கணவர் ; கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 3 மாத கர்ப்பிணி இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆரணிப்பாளையம் தர்மராஜா கோவில் தெருவைச் சேர்ந்த வேலுவின் மகள் அஸ்வதி (வயது 23) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த திவாகர் (25) ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
இத்தம்பதிக்கு 2 வயதுடைய பெண் குழந்தை ஒன்று இருப்பதோடு தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்த அஸ்வதி, கடந்த 22ஆம் திகதி கணவர் திவாகர் “கர்ப்பத்தை கலைத்துவிடு” என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அஸ்வதியின் தாய் விமலா, மகளை தன் வீட்டிற்கு அழைத்து சென்றார்.
பின்னர் நேற்று பகலில் அஸ்வதி மீண்டும் திவாகர் வீட்டுக்கு சென்றார். அப்போது இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர், “உடல் நலம் சரியில்லை, சிறிது நேரம் ஓய்வெடுக்கிறேன்” என கூறி அறைக்குள் சென்ற அஸ்வதி, நீண்ட நேரம் கடந்தும் வெளியில் வரவில்லை. இதையடுத்து ஜன்னல் வழியாக பார்த்தபோது அவர் தூக்குப்போட்டு உயிரிழந்திருந்தது தெரிந்தது.
இது குறித்து தகவல் அறிந்த ஆரணி டவுன் பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு விசாரணை ஆரம்பித்துள்ளனர்.
மேலும், திருமணமாகி 3 ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில் கர்ப்பிணி இளம்பெண் உயிரிழந்துள்ளதால், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் சிவா வழக்கமான விசாரணையை மேற்கொண்டு வருகிறார்.