சுற்றித்திரியும் மான் கூட்டங்கள் இடமாற்றப்படுமா?
ஹோமாகம நகரைச் சுற்றியுள்ள பல கிராம சேவைப் பிரிவுகளில் பரவிவரும் மான் கூட்டங்களை பொருத்தமான பகுதிக்கு கொண்டுச்சென்று விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருண பனாகொட இன்று (12) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேற்படி பகுதிகளில் 1,500 முதல் 2,500 வரை மான்கள் இருப்பதாகவும், அவை விவசாய நிலங்கள் அனைத்தையும் சேதப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மான் கூட்டங்கள்
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்
"எங்களது ஹோமாகம தேர்தல் தொகுதியில் 5 அல்லது 6 கிராம சேவையாளர் பிரிவுகளில் அதிகளவான மான்கள் காணப்படுகின்றன.
இந்த சூழ்நிலையை சரிசெய்ய நாங்கள் பல வருடங்களாக நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த விலங்குகளை இங்கிருந்து அகற்ற வனப் பாதுகாப்புத் திணைக்களம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.
வனப் பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து, தொகுதியில் உள்ள மான்களின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கான கணக்கெடுப்பைத் ஆரம்பித்துள்ளோம்.
தற்போது, ஹோமாகம நகரைச் சுற்றியுள்ள 5 அல்லது 6 கிராம சேவைப் பிரிவுகளில் 1,500 முதல் 2,500 வரையிலான மான்கள் விவசாயிகளின் அனைத்து உடமைகளையும் அழித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
எனவே, அவற்றை மிகவும் பாதுகாப்பாக பிடித்து பொருத்தமான பகுதியில் விடுவிக்க முடிவெடுத்துள்ளோம்" என்று இதன் போது சுட்டிக்காட்டினார்.