பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலையில் மாற்றமா?
பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மற்றும் ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளமுடியும்.
பேலியகொடை மற்றும் கொழும்பு - புறக்கோட்டை பொருளாதார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலைகள் அண்மைய நாட்களுடன் ஒப்பிடும் போது ஏற்றத்தாழ்வை பதிவு செய்துள்ளன.
இதன்படி, இன்று பாகிஸ்தான் உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 165 ரூபாயிலிருந்து 170 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றது. ஈரான் உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 210 ரூபாயிலிருந்து 220 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அத்துடன், யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் இந்தியா பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 220 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையிலும், தம்புள்ளை பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 100 ரூபாய் முதல் 140 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளைப்பூடு ஒரு கிலோகிராம் 350 ரூபாய்க்கும், செத்தல் மிளகாய் ஒரு கிலோகிராம் 600 ரூபாய் முதல் 650 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், முட்டையின் விலையை 10 ரூபாயால் குறைக்க முடிவு செய்யப்பட்டதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒரு வெள்ளை முட்டையை 18 ரூபாய்க்கும், ஒரு சிவப்பு முட்டையை 20 ரூபாய்க்கும் விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.