காட்டு யானைகளின் ஆக்கிரமிப்பு ; மட்டக்களப்பிற்கு படையெடுத்த காட்டுயானைகள்
அண்மைக்காலமாக காட்டு யானைகளின் ஆக்கிரமிப்புக்கள் அதிகரித்துள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் பகுதிக்கு எட்டு காட்டுயானைகள் கூட்டமாக படையெடுத்து வந்துள்ளன.
குறித்த யானைகள் கூட்டம் மண்டூர் பகுதிக்கு சனிக்கிழமை(17.02.2024) மாலை இவ்வாறு கூடியுள்ளன.
இந்நிலையில், யானைகள் கூட்டம் கூட்டமாக அப்பகுதிக்குப் படையெடுத்து வருவதனால் மக்கள் மிகவும் சிரமப்படுவதாக, அப்பகுதி மக்கள் போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதனுக்கு தெரிவித்தனர்.
காட்டு யானைக் கூட்டம்
இதனையடுத்து, பிரதேச செயலாளரின் தலைமையில் வனஜீவராசிகள் பாதுகாப்பு அலுவலகத்தின் உத்தியோகஸ்த்தர்கள், கிராம சேவகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் ஒன்றிணைந்து காட்டு யானைக் கூட்டத்தை அப்புறப்படுத்துவதற்கு பல முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.
மேலும், வனஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள் யானை வெடிகள் வைத்து மிக நீண்ட நேர போராட்டத்திற்கும் மற்றும் பலத்த பிரயத்தனத்திற்கு மத்தியிலும், சனிக்கிழமை மாலை சுமார் 6.30 மணியளவில் அப்பகுதியிலிருந்து ஒருவாறு காட்டு யானைக் கூட்டத்தை அப்புறப்படுத்தியுள்ளனர்.
எனினும் அப்பகுதியிலுள்ள கிராமங்களை அண்மித்துள்ள பற்றைக் காடுகளிலேதான் அக்காட்டு யானைகள் தங்கியிருப்பதால் அப்பகுதியிலுள்ள பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.