வீரவன்சவின் வழக்கு ; கறுவாத்தோட்ட பொலிஸ் அதிகாரிக்கு அழைப்பாணை
கொழும்பு, தும்முல்லையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு அருகிலுள்ள வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டம் செய்ததன் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில், விமல் வீரவன்ச உட்பட 06 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணைகளை மேற்கொண்ட கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தின் சிறு முறைப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரியை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு இன்று (19) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், இதன்போது கறுவாத்தோட்டம் பொலிஸாரின் நெறிப்படுத்தலின் கீழ் இரண்டு சாட்சிகளிடம் முறைப்பாட்டுத் தரப்பு சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த பிரதான நீதவான், கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தின் சிறு முறைப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரியை எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து அழைப்பாணை விடுத்துள்ளார்.
இதற்கிடையில், ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விமான சேவைகள் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகளை பெப்ரவரி 03 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் நிஹால் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.