போராட்டங்கள் பற்றி எமக்கு தெரியாது; பங்காளி கட்சிகள் கைவிரிப்பு
கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அணி விடுத்துள்ள போராட்ட அழைப்புக்கள் தொடர்பில், தமக்கு எதுவும் தெரியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் மூன்று தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் 17ஆம் திகதி முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறை வரை படகுச்சவாரியும், 18ஆம் திகதி வடக்கு கிழக்கு கமநல சேவைகள் திணைக்களங்களின் முன்பாக போராட்டமும் செய்ய எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் அந்த போராட்டங்கள் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றும், அதற்கான அழைப்பும் தமக்கு கிடைக்கவில்லை என்றும், இலங்கை தமிழ் அரசு கட்சி, புளொட், ரெலோ ஆகிய மைப்புக்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் மூன்று கட்சிகளின் தலைமைகளும் கூறுகையில்,
“மீனவர்கள், விவசாயிகளின் பிரச்சனைகளிற்காக போராட வேண்டும். அதை யாரும் தனநபர்கள் செய்கிறார்களோ தெரியவில்லை. ஆனால் கூட்டமைப்பு 17,18ஆம் திகதி போராட்ட முடிவுகளை எடுக்கவில்லை.
அரசாங்கத்தின் கொள்கைகளினால் விவசாயிகள், மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதற்காக நாடாளுமன்றதிலும் , வெளியிலும் கூட்டமைப்பு தொடர்ந்து குரல் கொடுக்கும். எனினும் இந்த விடயங்களை கையாள்வது குறித்து கூட்டமைப்பு ஆராயும்.
அதேநேரம், அரசியல் உள்நோக்கங்களுடன் சிலர் இந்த விவகாரங்களை கையிலெடுத்து, கூட்டமைப்பிற்குள் வீணாண குழப்பங்களை ஏற்படுத்தபவர்கள் தொடர்பில் தாம் அவதானமாக இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அத்துடன் இந்த போராட்டம், எம்.ஏ.சுமந்திரன் அணியினராலேயே திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சியில், எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கின், த.கலையரசன் அணி மட்டுமே இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்த அவர்கள், ஏனைய பிரமுகர்கள் யாரும் அதை அறிந்திருக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், முல்லைத்தீவிலிருந்து பருத்தித்துறை வரையான படகுச் சவாரியை, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை அனைத்து ஏற்பாடுகளையும் முடித்த பின்னர், இன்று இரவு 7 மணியளவில் எம்.ஏ.சுமந்திரன் தரப்பினர் நடத்தும் இணைய வழி கலந்துரையாடலில், கட்சியின் தலைவரும் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதன் மூலம், இன்றிரவு , சுமந்திரன் அணியின் போராட்ட விபரங்களை, இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் எனவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.