வவுனியாவில் பல மணித்தியாலமாக நீர் விநியோகம் தடை
வவுனியா நகரத்திற்குட்பட்ட பல பகுதிகளில் கடந்த 18 மணித்தியாலயத்திற்கு மேலாக நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோககியுள்ளனர்.
வவுனியா நகரின் சில பகுதிகள், மன்னார் வீதி, குருமன்காடு, அரச விடுதிப் பகுதி உளளிட்ட சில பகுதிகளில் சனிக்கிழமை (21) பிற்பகல் 3 மணி முதல் தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பினால் வழங்கப்படும் நீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது.
அறிவித்தல் இன்றி நீர் விநியோகம் தடை
இதனால் வர்த்தக நிலையங்கள், உணவகங்கள், அரச விடுதிகள், வீடுகள் என்பவற்றில் தமது அன்றாட செயற்பாடுகளுக்கு நீரைப் பெற்றுக் கொள்ள முடியாமல் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர்.
நகர் பகுதியில் இந்த நீரை நம்பியே பல்வேறு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 18 மணித்தியாலமாக எந்தவித அறிவித்தலும் இன்றி நீர் விநியோகம் தடைப்பட்டதால் அவர்களது இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிறுவர்களும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இது தொடர்பில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினரை தொடர்பு கொண்டு கேட்ட போது, நீர் விநியோக குழாயில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த வெடிப்பு புகையிரத தண்டவாளத்திற்கு கீழ் உள்ள குழாயில் ஏற்பட்டுள்ளதால் புகையிரத திணைக்க அதிகாரிகள் வருகை தந்த பின்னரே அதனை சீர் செய் முடியும் எனவும் அதனால் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.