கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத நடவடிக்கைகள் ; அரசின் உடனடி தலையீட்டை கோரும் ஹிஸ்புல்லாஹ்
மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் பிரதான வாழ்வாதாரமாக விளங்கும் கடற்றொழில், தற்போது கடற்கொள்ளை மற்றும் மீன் திருட்டுச் சம்பவங்களால் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடலில் சட்டவிரோதமான முறையில் நிகழும் மீன் திருட்டு மற்றும் கடற்கொள்ளையினால் இந்த மூன்று மாவட்ட கடற்றொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வாகரைப் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பாரிய மீன் திருட்டுச் சம்பவங்கள் இதற்கு சான்றாகும்.
கிழக்கு மாகாண கடற்றொழிலாளர்களின் இந்த அவல நிலைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் எனவும், கடல் கொள்ளையர்களைக் கட்டுப்படுத்தி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்க அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தியுள்ளார்.