வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 24,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நீர் விநியோகம்
தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 7 மாவட்டங்களைச் சேர்ந்த 25 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நிலவும் வறட்சியான வானிலை காரணமாக இந்த 7 மாவட்டங்களிலும் உள்ள 26,457 குடும்பங்களைச் சேர்ந்த 84,545 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

குடிநீர் விநியோகம்
இதன் காரணமாக 6 மாவட்டங்களைச் சேர்ந்த 22 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கும் அந்த நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, 24,144 குடும்பங்களைச் சேர்ந்த 75,734 பேருக்கு குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இவர்களில் அதிகளவானோர் மொனராகலை மாவட்டத்திலேயே பாதிக்கப்பட்டுள்ளதுடன், அம்மாவட்டத்தின் 11,074 குடும்பங்களைச் சேர்ந்த 35,639 பேருக்கு குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் 9,547 குடும்பங்களைச் சேர்ந்த 28,253 பேருக்கும், அம்பாறை மாவட்டத்தில் 2,823 குடும்பங்களைச் சேர்ந்த 8,847 பேருக்கும், பொலன்னறுவை மாவட்டத்தில் 683 குடும்பங்களைச் சேர்ந்த 2,646 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 79 பேருக்கும் குடிநீர் விநியோகிக்கஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.