நாட்டில் பிரதான ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு ; வெள்ள அபாய எச்சரிக்கை
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாகப் பிரதான ஆறுகள் சிலவற்றின் நீர்மட்டம் கணிசமான அளவு உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, களனி கங்கையின் க்ளென்கோர்ஸ் (Glencourse) பகுதியிலும், நில்வளா ஆற்றின் பாணடுகம பகுதியிலும் தற்போது சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேல்நில நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக, பின்வரும் பகுதிகளிலுள்ள ஆறுகளின் நீர்மட்டம் எச்சரிக்கை மட்டத்தில் காணப்படுகின்றது:
களனி கங்கை: ஹங்வெல்ல, நோர்வுட் கெசல்கமு ஓயா மற்றும் குருகொட ஓயா
களு கங்கை: மகுரு கங்கை, மில்லகந்த (குடா கங்கை) மற்றும் இரத்தினபுரி
கிங் கங்கை: தவலம மற்றும் பத்தேகம
மகாவலி கங்கை: பேராதனை கடந்த 12 மணித்தியாலங்களில் (இரவு 9:00 மணி வரையான காலப்பகுதியில்) நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்துள்ளதுடன், அதிகபட்ச மழைவீழ்ச்சியாகக் கித்துல்கல பகுதியில் 89.6 மி.மீ பதிவாகியுள்ளது.
இதுதவிர நாவலப்பிட்டி (81.9 மி.மீ), கிரிவுல்ல (78.4 மி.மீ) மற்றும் தெரணியகல (76.7 மி.மீ) ஆகிய பகுதிகளிலும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.