புற்றுநோயாளிகளுக்காகவும் மாணவர்களுக்காகவும் இலங்கையை சுற்றி நடைபயணம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு மருந்துவகைகள் மற்றும் கஷ்டப்பட்ட ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கும் நோக்கில் மாத்தறை தெனியாய பிரதேசத்தைச் சேர்ந்த சுகத் பத்திரன நடைபயணத்தை ஆரம்பித்துள்ளார்.
சுகத் பத்திரன தனது நடைபயணத்தை கடந்த டிசம்பர் 31 கொழும்பு காலிமுகத்திடலில் ஆரம்பித்து இன்று (ஜன30) திங்கட்கிழமை மட்டக்களப்பை வந்தடைந்தார்.
மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்
இந்நிலையில் இன்று (30) மட்டக்களப்பை வந்தடைந்த சுகத் பத்திரன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையின் வரைவடத்தின்படி கரையோரமாக இலங்கையை சுற்றிவருவதுடன் அந்த நடபயணத்தில் கிடைக்கும் நன்கொடைகளை கஷ்டப்பட்ட ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புற்று நோயால் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு மருந்துகள் அடங்கி பொதியை வழங்கவுள்ளேன்.
இதற்கு முன்மாதிரியாக தனியாக இந்த சுற்று பயணநடையை கொழும்பு காலிமுகத்திடலில் கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி ஆரம்பித்தேன்.
அலாவத்தை புத்தளம் கல்பிட்டி நொச்சியாகம ஊடாக தலைமன்னார் சென்று அங்கிருந்து பூநகரி ஊடாக யாழ்ப்பாணம் பருத்தித்துறை சென்று அங்கிருந்து பரந்தன் முல்லைத்தீவு திருகோணமலை ஊடாக மட்டக்களப்பிற்கு இன்று 1,200 கிலோமீற்றர் தூரம் நடையாக வந்தடைந்துள்ளேன் என்றார்.
இங்கிருந்து அக்கரைப்பற்று பொத்துவில் ஊடாக அம்பாந்தோட்டை கதிர்காமம் சென்று அங்கிருந்து மாத்தறை ஊடாக 2 ஆயிரத்து 200 கிலோமீற்றர் தூரத்தை கொண்ட இலங்கையை சுற்றிவரும் தனது நடைபயணம் கொழும்பு காலிமுகத்திடலை சென்றடையவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன்போது கல்வி உபகரணங்கள் தேவைப்படும் பாடசாலை மாணவர்களை தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
அத்துடன் நடைபணம் ஆரம்பித்த நாளில் இருந்து இன்று வரை தனக்கு மக்கள் ஆதரவு வழங்கிவருவதாகவும் இதில் இணையவிரும்பியோர் தன்னோடு இணைந்து பயணிக்கலாம் எனவும் சுகத் பத்திரன அழைப்பு விடுத்துள்ளார்.