மஞ்சள் பூசிய மணமகளுக்கு நடந்த சம்பவம் ; துயரத்தில் முடிந்த திருமண கொண்டாட்டம்
மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் (Khargone) மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது மஞ்சள் பூசிய மணமகள் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்கோன் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான ராகி (Rakhi) என்ற இளம்பெண்ணுக்கு கடந்த ஏப்ரல் 22 அன்று 'ஹல்தி' (மஞ்சள் பூசும்) சடங்கு நடைபெற்றுள்ளது.

மஞ்சளில் கலப்படம்
மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்கள் கலந்த கலவையை உடலில் பூசிய சில மணிநேரங்களிலேயே அவருக்குத் தொண்டை வீக்கம், உதடு வீக்கம் மற்றும் உடல் முழுவதும் சிவந்த தடிப்புகள் ஏற்படத் தொடங்கின.
மணமகளின் நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவர் உடனடியாக மாவட்ட அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக இந்தூரில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கர்கோன் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உள்ளூர் சந்தையில் விற்கப்படும் மஞ்சளில் கலப்படம் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அந்தப் பகுதியில் உள்ள கடைகளில் மஞ்சள் மற்றும் மசாலாப் பொருட்களைச் சேகரித்து ஆய்வக சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு இன்னும் நான்கு நாட்களே இருந்த நிலையில், மணமகள் உயிரிழந்தது அந்தப் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.