மூத்த கலைஞர் சதிஸ் சந்திர எதிரிசிங்க காலமானார்
மூத்த கலைஞர் சதிஸ்சந்திர எதிரிசிங்க தமது 84 வது வயதில் காலமானார்.
அவர் உடல் நலக்குறைவினால் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (23) காலமானதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரபல பாடகர் சுனில் எதிரிசிங்கவின் சகோதரரான சதிஸ்சந்திர எதிரிசிங்க, நடிப்பு மற்றும் இயக்கம் ஆகிய இரு துறைகளிலும் கலை உலகிற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கிய ஒரு இணையற்ற கலைஞர் ஆவார்.

1941 பெப்ரவரி 10 ஆம் திகதி களனியில் பிறந்த பட்டிகிரிகே சதிஸ்சந்திர எதிரிசிங்கவின் கலை வாழ்க்கை அரை நூற்றாண்டிற்கும் மேற்பட்ட நீண்ட வரலாற்றைக் கொண்டது.
1986 ஆம் ஆண்டு காமினி பொன்சேகா இயக்கிய 'கெட்டி வலிகய' திரைப்படத்தில், ஒரு சிங்கள இளைஞனாக வெறும் 90 வினாடிகள் மட்டுமே நடித்ததற்காக அவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அதேநேரம் 1987 ஆம் ஆண்டு சரசவி விருது விழாவில், பௌத்த துறவி ஒருவராக அவர் வெளிப்படுத்திய சிறந்த நடிப்புத் திறமைக்காக அவருக்கு சிறப்பு நடுவர் விருது வழங்கப்பட்டது.
1963 ஆம் ஆண்டு அவர் முதன்முதலில் தயாரித்த 'பகதபஸ்' என்ற மேடை நாடகம் அரங்கேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.