வவுனியா பல்கலை மாணவர் வரவேற்பு பதாதையில் புறக்கணிக்கப்பட்ட தமிழ் மொழி!
வவுனியா பல்கலைக்கழகத்தின் மாணவர் வரவேற்பு பதாதையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
2021 (2022) ஆம் அண்டின் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி வவுனியா பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களை இணைந்துகொள்ளும் நடவடிக்கை வவுனியா பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் (12-092-2023) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் குறித்த மாணவர்களை வரவேற்கும் முகமாக பல்கலைக்கழக விடுதி மற்றும் அதனுடன் இணைந்த பகுதியில் வரவேற்பு பதாதைகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
குறித்த பதாதையில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதுடன், ஆங்கில மொழியும் காணப்பட்டுள்ள நிலையில் தமிழ் மொழி முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வடமாகாணத்தில் உள்ள 2ஆவது பல்கலைக்கழகமும், தமிழ் மக்கள் வாழும் பகுதியில் உள்ள வன்னிக்கான பல்கலைக்கழகமுமான வவுனியா பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்து 2 ஆண்டுகள் முடிவதற்கு முன்னரே தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு சிங்களமயமாக்கல் இடம்பெறுவது குறித்து சமூக ஆர்வலர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் விசனம் வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.