வவுனியாவில் பரபரப்பு: வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸார்!
வவுனியா - ஓமந்தைப் பகுதியில் மரக்கடத்தலில் ஈடுபட்டு நிறுத்தாமல் சென்ற வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, பல இலட்சம் பெறுமதியான மரங்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் சாமந்த விஜயசேகர அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மாலின் அஜந்த பெரேரா அவர்களின் உத்தரவின் அடிப்படையில்,
மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதர் அழகியவண்ணனின் தலமையில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர், உடனடியாக செயல்பட்டு ஓமந்தை, பாலமோட்டைப் பகுதியில் நேற்று இரவு விசேட கண்காணிப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது, மரங்களை ஏற்றி வந்த பிக்கப் ரக வாகனம் பொலிசாரை மோதித் தள்ளும் வகையில் செயற்பட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இதனையடுத்து பொலிஸார் குறித்த வாகனத்தை நோக்கி 5 முறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது வாகனத்தை கைவிட்டு மரங்களை கடத்திச் சென்றவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
குறித்த வாகனத்தை கைப்பற்றிய பொலிசார் அதில் இருந்து சுமார் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான மரங்களை மீட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் குறித்த வாகனத்தில் பயணித்தவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.