அலி காமெனி உடல் நல்லடக்கம் செய்யப்படவில்லை ; மொஜ்தபா காமெனி எங்கே!
அமெரிக்க - இஸ்ரேல் இணைந்து ஈரானில் நடத்திய கூட்டுத்தாக்குதலில் ஈரானின் உயர் தலைவர் அயதுல்லாஹ் அலி காமெனி உயிரிழந்து ஏழு வாரங்கள் கடந்தும் இன்னும் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இது ஈரானின் மத, கலாசார, அரசியல் மரபுகளுக்கு மாறான ஒரு செயல் என சர்வதேச மட்டத்தில் கருதப்படுகிறது. 86 வயதான அலி காமெனியின் உடலை நல்லடக்கம் செய்வதற்கான இடத்தை ஈரான் அரசு இன்னும் இறுதி செய்யவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

நல்லடக்கம் செய்வதற்கான இடம் இறுதி செய்யவில்லை
மறைந்த முன்னாள் உயர் தலைவரின் மகனும் தற்போதைய உயர் தலைவருமான மொஜ்தபா காமெனி தலைமையிலான நிர்வாகமானது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளால் ஈரானுக்கு ஏற்படுத்தப்படும் பெரும் போர் அச்சுறுத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமையே, அலி காமெனியின் உடல் நல்லடக்கம் செய்யப்படாமல், இறுதி மரியாதை நிகழ்வுகள் தாமதமாவதற்கான சூழ்நிலைக் காரணங்களாக அமைவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
மேலும், ஈரான் பாதுகாப்பு நிபுணர் ஒருவர், நல்லடக்கத்துக்கான தாமதத்துக்கு காரணம் போர் குறித்த கவலையல்ல, மாறாக, அச்சமே என்று குறிப்பிட்டுள்ளார். ஈரானில் இயங்கும் ஜனநாயகப் பாதுகாப்புக்கான அறக்கட்டளையைச் சேர்ந்த Behnam Taleblu, நியூயோர்க் போஸ்ட் பத்திரிகையிடம்,

அமெரிக்கா ஈரான் இடையே ஒரு நிலையற்ற போர்நிறுத்தம் நிலவியிருந்தபோதிலும், மொஜ்தபா காமெனி வழிகாட்டலில் உள்ள ஈரான் அரசு தொடர் போர் அச்சத்தால் முடங்கிப்போயுள்ளது என்றும் ஒரு நினைவஞ்சலி இறுதி மரியாதை நிகழ்வை நடத்தும் நிலையில் அரசு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அரசு மிகவும் அச்சத்தில் இருக்கிறது. எந்த சவாலையும் எதிர்கொள்ள முடியாத அளவுக்கு பலவீனமாக உள்ளது” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
அயதுல்லாஹ் அலி காமெனியின் நல்லடக்க நிகழ்வினை ஈரான் தாமதப்படுத்துவதற்கான காரணங்களை நிபுணர்கள் சிலர் கருத்துரைத்துள்ளனர். அயதுல்லாஹ் அலி காமெனிக்கான இறுதிச் சடங்குகளை பிரம்மாண்டமான முறையில் நடத்தினால், அந்த இடத்தை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தக்கூடும் என்று ஈரான் அரசு அஞ்சுகிறது.
மொஜ்தபா காமெனி எங்கே...
இறுதி மரியாதை ஊர்வலத்தைப் பயன்படுத்தி, ஈரானில் உள்ள தேசியவாதிகள் மற்றும் போராட்டக்காரர்கள் அரசுக்கு எதிராக கிளர்ச்சிகளில் ஈடுபடலாம் என்ற அச்சமும் அங்கு காணப்படுகின்றமை சுட்டிக்காட்டப்படுகிறது.
அதுமட்டுமன்றி, புதிய உயர் தலைவரான மொஜ்தபா காமெனி, தனது தந்தை இறந்த பின்னர், பல வாரங்களாக பொதுவெளிக்கு வரவில்லை என்றும் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், தந்தைக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றால், அந்த நிகழ்வுக்கு மகன் வருகைதராவிட்டால், அவருக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்த கேள்விகள் பொதுவெளியில் கிளம்பும் என்றும் அது, அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்றும் கருதப்படுகிறது.
அயதுல்லாஹ் அலி காமெனியின் உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்கான இடத்தை உறுதி செய்வதற்காக, ஈரானின் வடகிழக்கு நகரமான மஷ்ஹத்தை அந்நாட்டு அரசு ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை நல்லடக்கம் தொடர்பில் தற்போது ஆராய்ந்து வரும் மஷ்ஹத் நகரமானது காமெனியின் சொந்த ஊர் என்பதோடு, அது, இஸ்ரேலிலிருந்து வெகு தொலைவில், துர்க்மெனிஸ்தானுடனான ஈரானின் எல்லையில் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகிறது.