இலங்கை விமானப்படைக்கு 10 ஹெலிகொப்டர்கள் அமெரிக்கா அன்பளிப்பு !
இலங்கை விமானப்படைக்கு அன்பளிப்பாக , அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான 10 ஹெலிகொப்டர்கள் வழங்கப்படவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தனது Xதளத்தில் இதனை பதிவிட்டுள்ளார். அதில், இந்த 10 ஹெலிகொப்டர்களும் இம்மாதத்தின் ஆரம்பத்தில் இலங்கையை வந்தடையும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை விட்டுச்செல்லும் அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங்
அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான Bell 206 SEA RANGER ரக ஹெலிகொப்டர்களே இலங்கை விமானப்படைக்கு வழங்கப்படவுள்ளது. திட்வா பேரிடரின் போது தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஹெலிகொப்டர்கள் மிகவும் உதவியது.
இந்த 10 ஹெலிகொப்டர்களும் இலங்கை விமானப்படையையும் விமானிகளுக்கான பயிற்சிகளையும் மேம்படுத்த உதவும் எனவும் நம்பப்படுவதாகவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை கிட்டத்தட்ட நான்கு வருட ஆழ்ந்த ஈடுபாட்டுடன் கூடிய சேவைக்குப் பிறகு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.