ஹோமாகம தீ விபத்து ; தொழில் பிரதி அமைச்சரின் அதிரடி உத்தரவு
ஹோமாகம, கட்டுவான தொழில்பேட்டை அமைந்துள்ள ஹெல்மட் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விரிவான விசாரணை நடத்தி, தாமதமின்றி முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு தொழில் அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு தொழில் பிரதி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இன்று (21) காலை சுமார் 9:45 மணியளவில் குறித்த மூன்று மாடி தொழிற்சாலைக் கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

துரித விசாரணை
80-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் இருந்தபோது பரவிய இந்தத் தீயில், 5 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீ மிகவேகமாகப் பரவியதால், தீயணைப்புப் படையினர் கடுமையான போராட்டத்திற்கு மத்தியிலேயே தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இச்சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, தொழிற்சாலையின் பாதுகாப்பு நடைமுறைகள், தொழிலாளர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விபத்துக்கான பின்னணி குறித்து துரித விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு அமைச்சின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.