அஸ்வெசும நலன்புரித் திட்டம் பெறுபவர்களுக்கான அவசர அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறும் பயனாளர்களை குறிவைத்து பண மோசடி முயற்சிகள் இடம்பெற்று வருவதாக நலன்புரி நன்மைகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சபை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டின் பல பகுதிகளில் உள்ள பயனாளர்களுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் பல்வேறு தொலைபேசி இலக்கங்கள் ஊடாக அழைத்து, தங்களை அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபையின் தலைமை அலுவலக அதிகாரிகள் என பொய்யாக அறிமுகப்படுத்தி, தனிப்பட்ட மற்றும் வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்களைப் பெற்று பண மோசடியில் ஈடுபட முயற்சிப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி நடவடிக்கைகளுக்கும் நலன்புரி நன்மைகள் சபைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என சபை வலியுறுத்தியுள்ளது.
எனவே, இதுபோன்ற போலி தொலைபேசி அழைப்புகள் அல்லது மோசடி முயற்சிகள் தொடர்பாக எவரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு நலன்புரி நன்மைகள் சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.