நீதிபதிகள் ஓய்வு வயது உயர்வுக்கு UNP எதிர்ப்பு ; அரசின் சட்டத்திருத்தம் நிராகரிப்பு
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை சட்டத்திருத்தங்களை ஐக்கிய தேசியக் கட்சி நிராகரித்துள்ளதுடன், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது இலங்கையின் நீதிமன்ற வழக்குத் தேக்கத்திற்குத் தீர்வாகாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆட்சிமுறை சார்ந்த மதிப்பீட்டு அறிக்கையில் விசேட நீதிமன்றங்களை அமைத்தல், நீதிபதி வெற்றிடங்களை நிரப்புதல், நீதிமன்ற நிர்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் சட்ட நடைமுறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருதல் போன்ற பரிந்துரைகளே முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிப்பது குறித்து பரிந்துரைக்கப்படவில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

எனவே, முன்மொழியப்பட்டுள்ள சட்டத்திருத்தங்களை தற்காலிகமாக இடைநிறுத்தி, இது குறித்து விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் ஐக்கிய தேசியக் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.