நிறைவேறாத வேண்டுதல்: ஆலயத்தில் இளைஞன் செய்த மோசமான செயல்!
இந்தியாவில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் தனது வேண்டுதல் நிறைவேறாத காரணத்தால் ஆலயத்தில் இருந்து சிவலிங்கத்தை திருடிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்திரப்பிரதேசம் - கௌசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதான சோட்டு என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் தான் விரும்பிய பெண்ணொருவரை திருமணம் செய்து கொள்ள நினைத்த நிலையில் அவர் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தெய்வத்தின் அருள் மூலம் தனது குடும்ப உறுப்பினர்களின் மனதை மாற்றி சமாதானப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில், சோட்டு சிவபெருமான் கோவிலுக்கு தினமும் சென்று பிரார்த்தனை செய்தார்.
ஒரு மாதமாக தனது வீட்டருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்த நிலையிலும் சோட்டுவின் வேண்டுதல் பலிக்கவில்லை.
இதனால் கோபமடைந்த இளைஞன், நேராக கோவிலுக்கு சென்று சிவலிங்கத்தை திருடி சென்றுள்ளார்.
கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பொது மக்கள், சிவலிங்கம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.
அப்பகுதியில் உள்ள சிசிரிவி காட்சிகளை பொலிஸார் ஆய்வு செய்த போது, சோட்டு தான் அந்த சிவலிங்கத்தை திருடியது தெரியவந்தது.
இதன் பின் அவரை கைது செய்த பொலிஸார் சிவலிங்கத்தை மீட்டு மீண்டும் கோவிலில் வைத்துள்ளனர்.