பாதாளக் குழுக்களின் செயற்பாடு தீவிரம் ; அநுர அரசிடம் நாமல் வலியுறுத்து
சமூக கட்டமைப்பில் பாதாளக் குழுக்களின் செயற்பாடு தீவிரமடைந்துள்ளது. எம்மை விமர்சித்துக் கொண்டிருக்காமல் பாதாள உலகக் குழுக்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, வலியுறுத்தினார்.
"விவசாயிகளைப் பலப்படுத்தி நாட்டு மக்களின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதாகக் குறிப்பிட்டே இந்த அரசு ஆட்சிக்கு வந்தது.
ஆனால் விவசாயிகள், மீனவர்களை பலப்படுத்தாமல் வெளிநாட்டில் இருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து வர்த்தகர்களை பலப்படுத்துவதையே அரசு செய்கின்றது.

இப்போது வெளிநாட்டில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுகின்றது. ஒரு பேனையில் அரிசி மாபியாவை இல்லாமல் செய்வதாகக் கூறினர். ஆனால் இப்போது நடப்பது வேறு. டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான நட்டஈடு வழங்கப்படவில்லை.
வீடுகள் வழங்கப்படவில்லை. 100 இலட்சம் ரூபா வழங்குவதாகக் கூறினர். விவசாயிகள், மீனவர்களைப் பாதுகாக்காமல் - உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல் இந்த அரசால் பயணிக்க முடியாது.
ரில்லியன் ரூபா நிதி கையிருப்பில் இருப்பதாகக் கூறினர். அதில் நட்டஈட்டை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்கள். ஆனால் வழங்கிய காசோலைகள் திரும்பி வருகின்றன.
வழங்கிய வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும். கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய பாதுகாப்பு தொடர்பில் கதைக்கின்றீர்கள்.
போர்க் காலத்திலும் இங்கு கிரிக்கெட் போட்டிகள் நடந்துள்ளன. ஆனால் நீங்கள் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாகக் கூறும் நிலையில் உங்கள் கட்சித் தலைமையகத்துக்கு அருகில் - இராணுவத் தலைமையகத்துக்கு அருகில் பாதுகாப்பு பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு நடக்கின்றது.
அரகலய போராட்டக் காலத்தில் ஊர்சாகப்படுத்தி இப்போது 12 பேர் தூக்கு மேடைக்குப் போயுள்ளனர்.
இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்துங்கள். நாட்டில் தலைதூக்கியுள்ள பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள் என்று கோரிக்கை விடுகின்றோம். - என்றார்.