விமானநிலையத்தில் பிரித்தானிய வாழ் யாழ் புலம் பெயர் தமிழருக்கு நடந்த சம்பவம்; யாரை குறை கூறுவது!
இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு தலைமை அலுவலகத்துக்கும் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு நிலையத்துக்குமிடையே உள்ள தொடர்பாடல் மற்றும் தொழிநுட்பக் குறைபாட்டால் புலம்பெயர் தமிழர் ஒருவர் இறுதிநேரத்தில் விமான நிலையத்தில் அவதிப்பட நேர்ந்ததுடன் காலாவதியான விசாவுக்குரிய தண்டப்பணத்தை செலுத்த நேரிட்டுள்ளதாக தெரியவருகின்றது.
விமான நிலையம் சென்ற குறித்த லண்டன் வாழ் யாழ்ப்பாண புலம் பெயர் தமிழர் பெரும் சங்கடங்களுக்கு உள்ளாதாக வேதனை வெளியிட்டுள்ளார். இன்று இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது,

அதிக கட்டணம் வசூலித்த அதிகாரிகள்
யாழ்ப்பாணத்தை பின் புலமாக கொண்ட பிரித்தானியாவில் வசிக்கும் புலம்பெயர் தமிழர் ஒருவர் சுற்றுலா விசாவில் இவ்வருட ஆரம்பத்தில் இலங்கை வந்துள்ளார்.
புலம்பெயர் தமிழர் அவரது விசா முடிவடைய முன் அவர் புறப்பட ஆயத்தமான போதும், ஈரான் - இஸ்ரேல் போர் சூழலால் விமானப் பயணம் மேலும் தாமதமாகியுள்ளது.
அதிரடியான பதிலடி; இப்படி திருப்பி அடிப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை; ஈரான் இராணுவத்தை மெச்சும் டிரம்ப் !
அதனைத் தொடர்ந்து அவர் யாழ்ப்பாணத்திலிருந்து இணையவழி மூலம் விசா புதுப்பித்தலுக்கு விண்ணப்பித்த போதும் விசா புதுப்பித்தல் கட்டணம் செலுத்துவதற்கான இணைப்பு (Payment Link) வந்து சேரவில்லை.
இதனையடுத்து அவர் நேரடியாகவே பத்தரமுல்லை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்துக்கு சென்ற போது, அவர் ஏற்கனவே விண்ணப்பித்திருந்த இரட்டைக் குடியுரிமைக்கான விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் அதற்கான கட்டணமான 2000 அமெரிக்க டொலர்களை செலுத்துமாறும் கோரப்பட்டிருந்தது.

இரட்டைக் குடியுரிமைக்கான உறுதிப்படுத்தல்
குறித்த பணத்தை அவர் கட்டிய பின்னர் இரட்டைக் குடியுரிமைக்கான உறுதிப்படுத்தல் கடிதத்தினை confirmation letter இனை வழங்கிய அதிகாரிகள் உங்கள் இரட்டைக் குடியுரிமைக்கான கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால் இனி உங்களுக்கு விசா புதுப்பிக்க வேண்டிய தேவையில்லை என தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து புலம்பெயர் தமிழர் தனது விமானப்பயண திகதியை மாற்றியமைத்து கட்டுநாயக்கா - பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று (17) சென்ற போது, அவர் தனது பழைய விசா மற்றும் இரட்டைக் குடியுரிமைக்கான உறுதிப்படுத்தல் கடிதத்தினையும் அங்கிருந்த குடியகல்வு அதிகாரிகளிடம் காட்டிய போது அவர்கள் விசா காலம் முடிவடைந்தும் இரண்டு வாரங்கள் மேலதிகமாக இலங்கையில் தங்கியிருந்தமைக்கான தண்டப்பணத்தை செலுத்த வேண்டும் என அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதோடு சுற்றுலா விசாவில் நாட்டுக்குள் வந்தால் அதே விசாவில் தான் வெளியேற வேண்டும் எனவும், உங்களது இரட்டைக் குடியுரிமை ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம் இன்னும் தங்களது கணனி தரவில் வந்து சேரவில்லை (Update ஆகவில்லை) எனவும், விசா காலாவதியான பின்பும் தங்கியிருந்தமைக்கான கட்டணமாக 600 அமெரிக்க டொலர்களை செலுத்துமாறும் தெரிவித்துள்ளனர்.
இல்லாவிடில் தங்களிடம் 300 டொலர்களை தந்துவிட்டு போகுமாறு தெரிவித்த நிலையில், அவர் 600 டொலர்களை உத்தியோகபூர்வமாக செலுத்தி அதற்கான பற்றுச் சீட்டையும் பெற்றுக் கொண்டு மன வருத்ததுடன் தனது பயணத்தை தொடர்ந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வேதனை வெளியிட்ட புலம்பெயர் தமிழர் ,
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை எனவும் , இலங்கைக்கு அதிக வருமானத்தை ஈட்டித்தரும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் விமான நிலையத்திலேயே ஊழல் தொடர்வதாகவும் விசனம் வெளியிட்டதாகவும் தெரியவருகின்றது.