போலி கடவுச்சீட்டுகளைப் பெற்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திடம் தவறான தகவல்களை சமர்ப்பித்து வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைப் பெற்ற சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி கடவுச்சீட்டு
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு தவறான தகவல்களை சமர்ப்பித்து 03 போலி கடவுச்சீட்டுகளைப் பெற்ற சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆட்கடத்தல், கடத்தல் விசாரணைகள் மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணையைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 32 மற்றும் 51 வயதுடைய, மாளிகாவத்தை மற்றும் எஹெலியகொடவைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் கொஹுவல மற்றும் பத்தரமுல்லையில் உள்ள இரண்டு புகைப்பட நிறுவனங்களின் உரிமையாளர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சந்தேக நபர்கள், தற்போது வெளிநாட்டில் இருக்கும் ஒழுங்கமைக்கப்பட்டப்பட்ட குற்றவாளியான பத்மசிறி பெரேரா கெஹெல்பத்தர பத்மே என்பரின் படத்தை வாட்ஸ்அப் மூலம் பெற்று, அவற்றைத் திருத்தி, போலியான தகவல்களுடன் கடவுச்சீட்டை தயாரிப்பதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு அனுப்பியுள்ளனர்.
மேலதிக விசாரணை
கெஹல்பத்தர பத்மே 2014 ஆம் ஆண்டு பெறப்பட்ட கடவுச்சீட்டை பயன்படுத்தி 2021 ஆம் ஆண்டு வெளிநாடு பயணம் செய்ததாகவும், அந்த கடவுச்சீட்டு 2024 இல் காலாவதியான போது, அவர் வெளிநாட்டில் இருந்தவாறு,
அவரது புகைப்படம் மற்றும் தகவல்களை போலியாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு வழங்கி ஒரு நாள் சேவை மூலம் 2024 ஆம் ஆண்டு மோசடியாக புதிய கடவுச்சீட்டையும், அவரது புகைப்படத்தை உள்ளிட்டு இரண்டு வெவ்வேறு பெயர்களில் 2025 ஆம் ஆண்டு மேலும் இரண்டு கடவுச்சீட்டுக்களையும் பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் நேற்று (23) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆட்கடத்தல், கடத்தல் விசாரணைகள் மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்துள்ளது.