யாழ்ப்பாணத்தின் பெரும் ஆபத்தான இருவரை நாடுகடத்திய இந்தியா ; பகீர் கிளப்பும் பின்னணி
யாழ்ப்பாணத்தில் இயங்கிய வன்முறை கும்பலை சேர்ந்த இருவர் 09 வருடங்களின் பின்னர் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் , கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொலை மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்களில் தேடப்பட்டு வந்த வன்முறை கும்பலை சேர்ந்த சிலர் நாட்டை விட்டு படகுகள் மூலம் இந்தியாவிற்கு தப்பி சென்று இருந்தனர்.

குற்றப் பின்னணி
அந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு மூவர் திருச்சி பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி நடமாடிய குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.
விசாரணைகளில் இவர்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொலை மற்றும் வன்முறை சம்பவங்களில் தேடப்படும் நபர்கள் என தெரியவந்தது. கைதானவர்கள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து , திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
யாழில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் மற்றும் கொலை குற்றத்தில் தேடப்படும் நபர்களை நாடு கடத்துமாறு இந்தியாவிடம் இலங்கை கோரி வந்தது.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 07ஆம் திகதி கொழும்பு கொட்டாச்சேனை பகுதியில் வைத்து ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கொலை குற்றவாளிகள் யாழ்ப்பாணம் ஊடாக இந்தியா தப்பி செல்ல திட்டமிட்டுள்ளமையை அறிந்து காரில் பயணித்து கொண்டிருந்த பெண் உள்ளிட்ட மூவரை கைது செய்தனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களுக்கும் கொழும்பில் உள்ள நபர்களும் இடையிலான தொடர்புகள் குறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் , கொழும்பில் இடம்பெற்ற கொலை மற்றும் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்கள் நாட்டில் இருந்து தப்பி சென்ற நிலையில் , தமிழகத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் , திருச்சி முகாமில் ஏற்பட்ட நட்பு ஊடாகவே யாழ்ப்பாணம் - கொழும்புக்கு வன்முறை கும்பல்களுக்கு தொடர்பு ஏற்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தேவா மற்றும் பிரகாஷ் ஆகியோரை விசாரணைக்கு உட்படுத்துவதற்காக நாடு கடத்துமாறு இந்தியாவிடம் கோரிய நிலையில் , இருவரும் நாடு கடத்தப்பட்ட நிலையில் கட்டுநாயக்கவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் யாழ்ப்பாணம் மற்றும் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்க ஏதுவாக அவர்கள் யாழ்ப்பாணம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது