பிறந்தநாளுக்கு வாங்கிய கேக்கில் பல்லி ; இரண்டு சிறுவர்கள் வைத்தியசாலையில்
பிறந்தநாளுக்கு வாங்கிச்சென்ற ஐசிங் கேக்கில் இறந்த பல்லி ஒன்று இருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு இரண்டு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம், மஸ்கெலியா ப்ரௌன்லோ தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
ஞாயிற்றுக்கிழமை (26) பிறந்த நாள் கொண்டாடுவதற்காக, மஸ்கெலியா நகரத்தில் உள்ள வெதுப்பகம் ஒன்றிலிருந்து ஐசிங் கேக் ஒன்றை வாங்கி சென்றுள்ளனர்.

அந்த பிறந்தநாள் விழாவில் கேக் வெட்டப்பட்டு, அனைவருக்கும் ஊட்டப்பட்டுள்ளது. அதன்பின்னர் மீதமிருந்த கேக்கை பார்த்தபோது, அதில் இறந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்துள்ளது.
இதனால், அதிர்ச்சி அடைந்த 5 வயது பெண் பிள்ளையும் 03 வயதான ஆண் குழந்தையும் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து மஸ்கெலியா சுகாதார அத்தியட்சகருக்கு புகார் செய்ததை தொடர்ந்து பொது சுகாதார அதிகாரிகள் சம்பவம் நடந்த வெதுப்பக உரிமையாளரிடம் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட உற்பத்தி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.