50 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட கடலாமை; வீட்டில் மறைத்து வைத்தவர் சிக்கினார்
வீடு ஒன்றில் உயிருடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 50 கிலோவுக்கும் அதிகமான எடையுடன் கடல் ஆமை ஒன்றை இன்று காலை இலுப்பைக்கடவை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற பொலிஸார் குறித்த கடல் ஆமையினை உயிருடன் மீட்டுள்ளனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மூன்றாம் பிட்டி கிராம பகுதியில் உள்ள வீடொன்றிலேயே குறித்த ஆமை மீட்பட்டுள்ளதுடன் கடல் ஆமையினை தன் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மூன்றாம் பிட்டி பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உயிருடன் மீட்கப்பட்ட குறித்த கடல் ஆமை இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், குறித்த ஆமையினை வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் கைதானவரிடம் மேலதிக விசாரணைகளை இலுப்பைக்கடவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.