திருகோணமலை மீனவரும் மாயம்!
திருகோணமலை சீனன்வெளியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க நேற்று வெள்ளிக்கிழமை (11) மாலை சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ஈச்சலம்பற்று பொலிஸில் குடும்பத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த உதுமாலெப்பை முஸ்தபா என்ற மீனவரே காணாமல் போயுள்ளார். குறித்த நபர் நேற்று வெள்ளிக்கிழமை (11) மாலை 5 மணிக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.
உறவினர்கள் முறைப்பாடு
இந்நிலையில், கடலுக்கு சென்றவர் இன்று (12) பகல் வரை கரைக்கு திரும்பவில்லை. அவரின் கையடக்க கைப்பேசிக்கு தொடர்பு ஏற்படுத்தியபோதும் அது இயங்காததையிட்டு உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் லங்காபட்டுண கடற்படை முகாமில் முறையிடப்பட்டுள்ளபோதிலும் கடற்படையினரிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை எனவும் காணாமல் போனவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடற்றொழில் அமைச்சர் தலையிட்டு குறித்த மீனவரை கண்டுபிடிக்க உதவ வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
அதேவேளை யாழ்ப்பாணத்திலும் கடலுக்கு சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.