தமிழர் பகுதியில் மதுவால் நேர்ந்த சோகம்: கணவனை காப்பாற்ற முயன்ற மனைவி உயிரிழப்பு!
திருகோணமலையில் உள்ள பகுதியொன்றில் மதுப் பாவனையில் இருந்த கணவனை காப்பாற்றுவதற்காக முயற்சித்த மனைவி உடலில் தீப்பற்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தில் பாலையூற்று, திருகோணமலையைச் சேர்ந்த பிரதீபன் நளினி என்ற ஒரு பிள்ளையின் தாயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பெண்ணின் கணவர் தினமும் மதுவை பாவித்து வந்துள்ளார்.
இவ்வாறான நிலையில், அவரை திருத்துவதற்காக குறித்த பெண் கடந்த 21-11-2024ஆம் திகதி தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிவிட்டு தீப்பெட்டியில் இருந்து தீ மூட்டி மிரட்டிக்கொண்டிருந்த வேளை திடீர் அவர் மீது தீப்பற்றியது.
அவரை காப்பாற்ற முயன்ற கணவனின் கை மீதும் தீப்பற்றியது. இதன்போது இருவரும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கடந்த 27-11-2024ஆம் திகதி யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றையதினம் (29) உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கணவன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.